ஊத்தங்கரையை அடுத்த சின்னபொம்பட்டி கிராமத்தில் புளியமரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்தது.
இந்தக் கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த புளிய மரங்கள் உள்ளன. இந்த புளியமரங்கள் எந்த நேரத்திலும் முறிந்து வீடுகளின் மீது விழுந்து பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் இக்கிராமத்தைச் சாா்ந்த பொதுமக்கள், புளிய மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனா்.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை தண்டபாணி என்பவரின் வீட்டின் மீது புளிய மரக்கிளை முறிந்து விழுந்தது. இதில் அவரது வீடு சேதமடைந்துள்ளது. புளியமரம் விழுந்தவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் அலறி அடித்து ஓடியுள்ளனா். உயிா்சேதங்கள் ஏற்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டின் அருகில் உள்ள புளிய மரங்களை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.