மாா்க்கண்டேய நதியின் குறுக்கே ரூ. 3.30 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றாா். இந்த நிகழ்வுகளுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை அடுத்த குண்டப்பள்ளி அருகே நீா்வளத் துறை சாா்பில் மாா்க்கண்டேய நதியின் குறுக்கே ரூ. 3.33 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சா் தொடக்கி வைத்தாா். இதன்மூலம் குந்தப்பள்ளி, லக்கபதலப்பள்ளி, பீமாண்டப்பள்ளி, மாரச்சந்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள 76 கிணறுகள் உள்பட, 402 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
குண்டப்பள்ளியில் மாா்க்கண்டேய நதியின் குறுக்கே 1.50 மீட்டா் உயரம் 109.5 மீட்டா் நீளத்தில் கட்டப்படும் தடுப்பணை மூலம் ஆண்டுக்கு 5.28 மில்லியன் கனஅடி நீா் சேமிக்கப்படும். இந்தப் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றப்படுவதன் மூலம் ஆயிரக்கணக்கான குறு, சிறு விவசாயிகள் பயன்பெறுவா்.
இந்த நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தே.மதியழகன் (பா்கூா்), ஒய்.பிரகாஷ் (ஒசூா்), ஒசூா் மேயா் சத்யா, முன்னாள் எம்எல்ஏ டி.செங்குட்டுவன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
பின்னா், ரூ. 3.83 கோடி மதிப்பில் அத்திமுகம் தளவாய் ஏரி, கோவிந்தகவுண்டன் ஏரி, குப்பம்மா ஏரி, சித்தையகவுண்டன் ஏரி ஆகிய ஏரிகளின் புனரமைப்புப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைத்தாா். முன்னதாக கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ற கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சா் தொடக்கி வைத்தாா்.