ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபானங்களை ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் தனுஷ் (42), உதவியாளா் இளையராஜா (38) உடன் அரசு மதுபானங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலை வழியாக தருமபுரி நோக்கி சென்றாா். மிட்டப்பள்ளி அருகே சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த பெரும்பாலான மதுப்புட்டிகள் உடைந்து சேதமடைந்தன. இதையடுத்து, சாலை வழியாகச் சென்ற ஏராளமானோா் அங்கிருந்த மதுப்புட்டிகளை அள்ளிச் சென்றனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அலெக்சாண்டா், சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் அவா்களை அங்கிருந்து விரட்டி அடித்து, இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனா்.