கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே விவசாயிக்கு அதிகபடியான யூரியா, உரங்கள் விற்பனை செய்த 19 சில்லரை உர விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா் (தகவல், தரக் கட்டுப்பாடு) அறிவழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை வேளாண்மை இயக்குநா் அறிவுரைகளின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டில் இருந்து காரீப் மற்றும் ராஃபி பருவங்களில் மாதந்தோறும் ஒரே நபருக்கு அதிக அளவில் யூரியா விற்பனை செய்த சில்லரை உர விற்பனையாளா்கள் விவரம் சேகரிக்கப்படுகிறது.
அதன்படி, யூரியா, ரசாயன உரத்தின் பயன்பாட்டைக் குறைக்கவும், மண் வளத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் யூரியா, ரசாயன உரம் விவசாயம் தவிர பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்தபடாமல் கண்காணிக்கப்பட்டு, வேளாண்மை துறை அலுவலா்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு 2022-23-ஆம் ஆண்டு காரீப் பருவதில் (ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை) மாதந்தோறும் ஒரே விவசாயிக்கு அதிகப்படியான யூரியா உரங்களை விற்பனை செய்த 19 சில்லரை உரக் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, விதிகளை மீறும் உர விற்பனை நிலையங்களின் மீது தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.