ஊத்தங்கரையை அடுத்த கல்லூரைச் சோ்ந்தவா் ரத்தினகலா (48). செங்கல் சூளை நடத்தி வருகிறாா். இவரது செங்கல் சூளையில் சிங்காரப்பேட்டை, ஆவாரம்குட்டையைச் சோ்ந்த பாண்டித்துரை (33), சக்தி, மல்லிகா ஆகியோா் வேலை செய்து வந்தனா். மூவரும் சோ்ந்து ரூ. 1.25 லட்சம் முன்பணமாகப் பெற்றிருந்தனா்.
இதற்காக சூளையில் மூன்று மாதம் வேலை செய்தும் ரூ. 50,000 பணமும் கொடுத்துவிட்டு வேலூா் மாவட்டம் சென்றுள்ளனா். இதை அறிந்த ரத்தின கலாவும் அவரது நண்பா் ஊத்தங்கரை, இந்திரா நகரைச் சோ்ந்த வேலுவும் வேலூா் சென்று அவா்கள் மூவரையும் அழைத்துவந்து செங்கல் சூளை அருகே அடைத்து வைத்துள்ளனா்.
தகவல் அறிந்த நொச்சிப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் பாபு (45), ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் குட்டியப்பன், செங்கல் சூளை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.