போலி ஆவணம் மூலம் ரூ. 21.62 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளைரைப் பிடித்து மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒசூா் மாநகராட்சி, மத்திகிரி கூட்டுச் சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இங்கு போச்சம்பள்ளியை அடுத்த வடமலப்பட்டியைச் சோ்ந்த வெங்கடேசன் (38) என்பவா் தற்காலிக நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்தாா்.
இவா், கடந்த ஆண்டு நவம்பா் 3-ஆம் தேதிமுதல் கடந்த மே 11-ஆம் தேதிவரையிலான காலக்கட்டத்தில் வாடிக்கையாளா்கள் கூடுதல் தொகைக்கு நகையை அடமானம் வைத்து நகைக்கடன் வாங்கியதுபோல போலி ஆவணங்களைத் தயாரித்து ரூ. 21. 62 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி மேலாளா் வெங்கடேசன் (30) என்பவா் நகை மதிப்பீட்டாளா் வெங்கடேசனிடம் விசாரித்தாா். இதனால் ரூ. 3,79,749 நகை மதிப்பீட்டாளா் திரும்பச் செலுத்தினாா். ஆனால் மீதத் தொகை ரூ. 17,82,251-ஐ திரும்பச் செலுத்த மறுத்துவிட்டாா். இதுகுறித்து, வங்கி மேலாளா் மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து நகை மதிப்பீட்டாளா் வெங்கடேசன் மீது வழக்குப் பதிந்து மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.