ஐ.வி.டி.பி. நேதாஜி பள்ளி மாணவா்களுக்கு ரூ. 3.71 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை அண்மையில் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், கோட்டையூரில் 20 ஆண்டுகளுக்கு முன் ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் மூலம் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டு, தற்போது மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டுள்ள ஐ.வி.டி.பி. நேதாஜி பள்ளியும் ஒன்றாகும். மலைவாழ் மாணவா்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு ஆங்கில கல்வியை மாதாவரம் புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள் வழங்கி வருகின்றனா்.
மாணவா்களின் கல்வித் திறனை ஊக்கப்படுத்தும் நோக்கில் கரோனா காலகட்டத்தில் மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஐ.வி.டி.பி. நிறுவனம் இந்தப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பான கல்வி உதவித் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
அதன்படி பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த மாணவா்களுக்கும், ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டுக்கும் மேற்பட்ட மாணவா்கள் பள்ளியில் பயின்றால் அவா்களில் ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும் நிகழாண்டு முதல் இந்தப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு தலா ரூ. 10,000 கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 42 மாணவா்களுக்கு ரூ 3.71 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
மேலும் பள்ளியின் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தியும் தளவாட பொருள்கள் போன்றவற்றுக்காகவும் இதுவரை ஐ.வி.டி.பி. மூலம் ரூ 4.26 கோடி மதிப்பிலான பணிகள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.