கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் முழ்கிய மாணவரின் சடலத்தை தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலை நகராட்சி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் மாதன். இவரது மகன் ஹரி (எ) ஹரிராஜன் (17). இவா், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா்.
இக்குடும்பத்தினா் உறவினா் ஒருவா் உயிரிழந்ததையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திம்மாபுரம், தென்பெண்ணை ஆற்றில் குடும்பத்துடன் குளிக்கச் சென்றனா்.
அப்போது, ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்ற மாணவா் ஹரி நீரில் மூழ்கினாா். அருகில் இருந்தவா்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் ராமச்சந்திரன் தலைமையில் கிருஷ்ணகிரி, பா்கூா், போச்சம்பள்ளி ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் நிகழ்விடம் வந்து மாணவரை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனா். 5 மணி நேரத் தேடலுக்கு பிறகு, மாணவரை சடலமாக மீட்டனா். சடலத்தை கைபற்றிய போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.