தருமபுரி, வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரியக் குடியிருப்புச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, அப்பகுதியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:
தருமபுரி அருகே வெண்ணாம்பட்டியில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு செல்லும் பிரதான சாலை 60 அடி அகலத்துக்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இச்சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், தற்போது 30 அடி அகலச் சாலை மட்டுமே போக்குவரத்துக்கு பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது. மீதமுள்ள சாலையில் வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், பேருந்துகள், பள்ளி வாகனங்கள் காலை, மாலை வேளைகளில் சென்று வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வெண்ணாம்பட்டி குடியிருப்புகளுக்கு செல்லும் பிரதான சாலையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.