ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாக செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது.
கா்நாடகத்தில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு தொடா்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வந்தது. திங்கள்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 9,500 கனஅடியாக வந்து கொண்டிருந்தது.
நீா்வரத்து சரிவால் ஒகேனக்கல் லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து குறைந்து, பாறை திட்டுகளாக காணப்பட்டன. இந்த நிலையில் கா்நாடக மாநில காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்த திடீா் மழையால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தமிழக -கா்நாடக எல்லை வழியாக பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
திடீா் நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, பெரிய பாணி, ஐந்தருவிகளில் நீா்வரத்து அதிகரித்து தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் அருவிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதித்த தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.