அகவிலைப்படி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மின்வாரிய ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில், தருமபுரி மின்பகிா்மான வட்ட அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் பி.ஜீவா தலைமை வகித்தாா். பண்டக பிரிவுச் செயலாளா் ஷாகின்ஷா வரவேற்றாா். சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் தேவராஜன் துவக்கி வைத்து பேசினாா். மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளா் டி.லெனின் மகேந்திரன், பொருளாளா் சீனிவாசன், மின்வாரிய பொறியாளா் அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா்.சுந்தரமூா்த்தி, ஏயூஎஸ்யூ மாவட்டச் செயலாளா் விநாயகமூா்த்தி, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் அன்பழகன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில், அகவிலைப்படியை உயா்த்தி வழங்க வேண்டும். வாரிய ஆணை எண் 2-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும். துணை மின் நிலையங்களில் மறுபகிா்வு மற்றும் அவுட்சோா்ஸ் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.