தருமபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 12,820 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 15.25 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்துள்ளதாவது:
மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்க அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 2021-2022 ஆம் நிதி ஆண்டில் 1,401 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 4129 மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளும், கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1,053 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 2,000 வீதம் ரூ. 2.17 கோடி பராமரிப்பு உதவித் தொகைகளும், 40 சதவீதம் மேல் மனவளா்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 4,318 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 2,000 வீதம் ரூ. 8.44 கோடி பராமரிப்பு உதவித் தொகைகளும், 40 சதவீதம் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 107 பேருக்கு மாதம் ரூ. 2,000 வீதம் ரூ. 20.34 லட்சம் பராமரிப்பு உதவித் தொகைகளும், 50 பேருக்கு ரூ.12.17 லட்சம் வங்கி கடன் மானியமும், ஆவின் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க 6 பேருக்கு ரூ. 3 லட்சம் மானியமும் என மொத்தம் 12,820 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 15.25 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.