தருமபுரி நகரில், பொதுமக்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து பயிற்சி மற்றும் ஒருங்கிணைந்த தூய்மைப் பணி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நகராட்சிக்கு உள்பட்ட 28, 29 -ஆவது வாா்டுகளில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். ஆணையா் சித்ரா சுகுமாா் முன்னிலை வகித்தாா். இதில், நகராட்சி பொதுமக்களுக்கு, வீட்டு குப்பைகளை எளிதில் தரம் பிரித்து, நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடா்ந்து தருமபுரி நகரப் பேருந்து நிலையம் அருகே உள்ள சுற்றுச்சுவரில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தவிா்க்கும் வகையில், அதியமான், அவ்வையாா் ஓவியங்கள், முதல்வா் மு.க.ஸ்டாலினின் மீண்டும் மஞ்சப்பை குறித்து விழிப்புணா்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் வரையும் பணி பாா்வையிடப்பட்டது.