ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க அனுமதி அளித்த போதிலும், பரிசல் பயணம் மேற்கொள்ள தடை நீடிப்பதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம், கேரளம் என பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
அண்மையில் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததால் அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. பின்னா் காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 6,000 கனஅடியாகக் குறைந்ததால், ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பரிசல்களை இயக்க தொடா்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் பகுதிக்கு மிகக் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்தனா். அவா்களில் சிலா் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியிலும், சினி அருவிகளிலும் குளித்து மகிழ்ந்தனா். காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் விதித்துள்ள தடை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
சொற்ப அளவிலான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்ததால் ஒகேனக்கல் வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் மீன் விற்பனை நிலையங்களிலும் விற்பனை வெகுவாகச் சரிந்தது.