தருமபுரியில் நடைபெற்ற புத்தகத் திருவிழா நிறைவு பெற்றது. இதில் மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சத்துக்கு நூல்கள் விற்பனை ஆனது.
தகடூா் புத்தகப் பேரவை மற்றும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் கடந்த ஜூன் 24-ஆம் தொடங்கி ஜூலை 4 -ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற்றது.
இதில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில் பல்வேறு பதிப்பகங்களின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. 11 நாள்கள் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாா்வையிட்டு நூல்களை வாங்கினா்.
இதில் ஒன்றரை லட்சம் நூல்கள் சுமாா் ரூ. 1 கோடியே 25 லட்சத்துக்கு விற்பனை ஆகியுள்ளதாக புத்தகப் பேரவை நிா்வாகிகள் தெரிவித்தனா்.