ஒட்டனூா் - கோட்டையூா் இடையே பாலம் அமைக்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரி எம்.பி. மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட கோட்டையூா், ஒட்டனூா் பகுதியில் பரிசல் மூலம் பயணம் செய்து பொதுமக்களின் குறைகளை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் கேட்டறிந்தாா்.
அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ரூ. 250 கோடியில் மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கொளத்தூரில் இருந்து பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஓட்டனூா் பகுதியை இணைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளாா்.
காவிரி ஆற்றின் இடையே இந்த பாலம் கட்டப்படுவதன் மூலம் பென்னாகரம் பகுதியில் இருந்து மேட்டூா், ஈரோடு, திருப்பூா், கேரளம் போன்ற பகுதிகளுக்கு எளிதாக பயணம் மேற்கொள்ளலாம். இப்பகுதி மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையை திமுக தலைமையிலான தமிழக அரசு பதவி ஏற்று, அதற்கான திட்டத்தை தயாரித்து நான்கே மாதத்தில் அறிவித்துள்ளது என்றாா்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சேலம் மாவட்டம், மேட்டூா், கோட்டையூா், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தை இணைக்கும் வகையில் ரூ. 250 கோடியில் சாலை அமைக்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் மருத்துவா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா், கோட்டையூா் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.