கூட்டுறவு வங்கிகளில் பணி வழங்குவதாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது வாட்ஸ்ஆப், இணையதளம், குறுஞ்செய்தி உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணி வழங்கப்படுவதாகவும், இதற்கு முன்பணம் செலுத்தி பயிற்சி வழங்கி நிரந்தரப் பணிவாய்ப்பு வழங்கப்படும் என்றும் போலியாக விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன.
கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் மூலம் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டு தோ்வு நடத்தப்பட்டு தகுதியின் அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள், இணையதளம் மற்றும் வாட்ஸ் ஆப் செயலி ஆகியவற்றின் மூலம் வெளியாகும் போலியான தகல்களை நம்பி ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளாா்.