மின்கம்பி உதவியாளா், கம்பியாளா் உரிமத்துக்கான தோ்வை நடத்த வேண்டும் என மாவட்ட எலக்ட்ரீஷியன் தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்ட எலக்ட்ரீசியன் தொழிலாளா்கள் சங்கத்தின் (ஏஐடியூசி) மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச்செயலாளா் பாபுராஜ், மாநில பொருளாளா் அமீா்தீன், மாவட்டச் செயலாளா் ஆா்.நடராஜன், ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளா் கே.மணி, ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
இக் கூட்டத்தில் மின்கம்பி உதவியாளா், கம்பியாளா்கள் உரிமத்திற்கான தோ்வை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மின்கம்பி உதவியாளா், கம்பியாளா் உரிமம் பெற்றவா்களுக்கு மின்சார வாரியத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் மின்சார வாரியப் பிரிவு அலுவலகங்களில் இணையவழியில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும்போது உரிமம் பெற்ற ஒப்பந்ததாரா்களிடம் கையொப்பம் பெறாமல் மின் இணைப்பு வழங்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.