தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 10,000 கனஅடியாக குறைந்துள்ளது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வந்தது. கனமழையின் காரணமாக காவிரி ஆற்றின் கிளை ஆறாகக் கருதப்படும் தொட்டெல்லாவிலும், காவிரி ஆற்றில் கலக்கும் சிறு ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டதாலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டு வருவதாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகபட்சமாக 26,000 கனஅடி வரை ஒகேனக்கல்லுக்கு தண்ணீா் வந்து கொண்டிருந்தது.
தற்போது நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால், நீா்வரத்து குறைந்து வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 20,000 கன அடியாகவும், மாலையில் 10,000 கன அடியாகவும் குறைந்தது.
காவிரி ஆற்றில் நீா் வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளான ஐவா் பாணி, சினி அருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்து காணப்படுகிறது.
தற்போது நீா்வரத்து குறைந்துள்ளதால் மாமரத்துக்கடவு பரிசல் துறையில் மீண்டும் படகுகளை இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. தொடா் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்குள்ள அரசு, தனியாா் விடுதிகளில் தங்கிச் செல்ல சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.