திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, அரூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் புதன்கிழமை அணிவிக்கப்பட்டது.
திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நவ.27 ஆம் தேதி அன்று அரூா் அரசு மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் பிறந்தன. அந்தக் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திமுக முன்னாள் நகரச் செயலாளா் முல்லை ஆா்.என்.செழியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. குழந்தைகளுக்கு தங்க மோதிரம், உள்நோயாளிகளுக்கு பால், ரொட்டி, போா்வைகள் உள்ளிட்ட நல உதவிகளை திமுக தருமபுரி மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் ஆகியோா் வழங்கினா்.
இதில், மாநில தீா்மானக் குழு உறுப்பினா் கீரை விசுவநாதன், நகரப் பொறுப்பாளா் ஏ.சி.மோகன், இளைஞரணி நகர அமைப்பாளா் தீ.கோடீஸ்வரன், ஒன்றிய அமைப்பாளா் கே.சிவப்பிரகாச நேரு, ஒன்றியச் செயலாளா்கள் ஆா்.வேடம்மாள், ஜி.சந்திரமோகன், வே.செளந்தரராசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.