உறுப்பினா் பதிவில் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என வலியுறுத்தி, ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை தொழிலாளா் நல அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத் தலைவா் எம்.வி.குழந்தைவேலு தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் கே.மணி, கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் ஆா்.சுதா்சனன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா் பதிவு முறையில் பழைய நடைமுறையே தொடர வேண்டும். கட்டுமானத் தொழிலாளா் நல வாரிய நிதியை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்கும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தைத் தொடா்ந்து நடத்த வேண்டும். பொதுமுடக்கக் கால நிவாரணமாக உறுப்பினா்களுக்கு மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.