திருப்பரங்குன்றம் கோயிலில் சுற்றித்திரிந்த வங்கதேச இளைஞா் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவா் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பரங்குன்றம் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வைகாசி விசாகத் திருவிழாவின்போது லட்சகணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனா். அப்போது இந்திய வரைபடத்துடன் சுற்றித்திரிந்த வங்கதேசத்தைச் சோ்ந்த காலிமூசா என்பவரை காவல் துறையினா் கைது செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பக்தா்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த நபரைக் கைது செய்த காவல் துறையினரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. எனினும் இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் காலிமூசா எதற்காக தமிழகம் வந்தாா், வரைபடத்தை எதற்காக வைத்திருந்தாா், வேறு ஏதேனும் சதித்திட்டத்தில் ஈடுபட்டாரா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.