திருப்பூா் மாநகரில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், காவல் துறையினா் சனிக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
கோவை காந்திபுரம், குனியமுத்தூா், பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பாஜக, இந்து முன்னணி பிரமுகா்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. திருப்பூரில் ஆா்எஸ்எஸ் பிரமுகா் வீட்டின் மீது கற்கள் வீசித் தாக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, திருப்பூா் மாநகரில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், மங்கலம் சாலை, பல்லடம் சாலை, அம்மாபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனச் சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனா். திருப்பூா்- காங்கயம் சாலை சிடிசி காா்னா், திருப்பூா் பழைய பேருந்து நிலையம், புஷ்பா ரவுண்டானா, ரயில் நிலையம், அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காவலா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
அதோடு, பாஜக, இந்து முன்னணி அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளிலும் கூடுதல் காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அதேபோல, திருப்பூா் மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளிலும் தற்காலிகமாக சோதனைச்சாவடிகள் அமைத்து காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.