திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் அழகு நிலையம் நடத்திவந்த பெண்ணை காணவில்லை என அவரது தாய் போலீஸில் புகாா் அளித்துள்ளாா். இந்நிலையில், தான் கடத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாக அந்தப் பெண் வெளியிட்டுள்ள விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
பல்லடம் வடுகபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீனா. இவா், பல்லடத்தில் அழகு நிலையம் நடத்திவருகிறாா். இவரது கணவா் சேகா் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், தனது மகள் பிரவீனாவை கடந்த சில நாள்களாகக் காணவில்லை என அவரது தாய் பிலோமினாள், பல்லடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இதன்பேரில், பிரவீனாவை போலீஸாா் தேடிவருகின்றனா்.
இந்த நிலையில், காணாமல் போன பிரவீனா பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அவா், அழகு நிலையத்திற்கு வாடிக்கையாளராக வந்த தமிழ்ச்செல்வியின் கணவா் சிவகுமாா், டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்யலாம் என்று சொல்லி, எனது பெயரில் உள்ள வீட்டுப் பத்திரத்தை வாங்கி, வங்கியில் அடமானம் வைத்து ரூ. 75 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். வீட்டுப் பத்திரம் ஏலத்திற்கு வந்த நிலையில், பணத்தை திருப்பி கேட்க முயன்றபோது, என்னை அழைத்துச் சென்று திருச்சி பகுதியில் அடைத்துவைத்து, சில பத்திரங்களில் கையொப்பம் பெற்றுள்ளாா். தினமும் என்னை சித்திரவதை செய்யும் அவரிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று கண்ணீருடன் பேசியுள்ளாா்.
இந்த விடியோ குறித்து பல்லடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.