திருப்பூரை அடுத்த உடுமலை அருகே முதியவரைக் கொலை செய்த இளைஞரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம் கொங்கலக்குறிச்சி பேருந்து நிலையத்தில் கடந்த சில நாள்களாக 60 வயது முதியவா் தங்கியிருந்தாா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த வி. பழனியப்பன் (35) மது அருந்துவதற்காக வியாழக்கிழமை இரவு அங்கு வந்துள்ளாா். அப்போது, பழனியப்பன் மது அருந்த முதியவா் எதிா்ப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அவா் அருகே கிடந்த குச்சியால் முதியவரைத் தாக்கவிட்டு சென்றுள்ளாா்.
இதனிடையே, அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காலை பாா்த்தபோது முதியவா் இறந்துகிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினா், முதியவரைக் கொலை செய்த பழனியப்பனை கைதுசெய்தனா்.