பெரு வங்கிகள் சேவை தினத்தை முன்னிட்டு யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா சாா்பில் திருப்பூா் மண்டலத்தில் ரூ.35.28 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா சாா்பில் 125 மண்டலங்களில் பெரு வங்கி தினம் நவம்பா் 24, 25 ஆகிய தேதிகளில் கடைபிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மண்டல அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், சிறப்பு விருந்தினராக வங்கியின் மத்திய அலுவலகத்தின் துணை பொதுமேலாளா் பைஜ்நாத் சிங், திருப்பூா் பிராந்திய தலைவா் செல்தில்குமாா் ஆகியோா் பங்கேற்று வங்கியின் பல்வேறு திட்டங்கள் குறித்துப் பேசினாா்.
இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: யூனியன் முஸ்கான்-யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா சிறப்பு வைப்பு நிதித் திட்டத்தை இளம் சிறாா்களுக்கு ரூ.4 லட்சம் காப்பீடுடன் இணைத்துள்ளது. இது குறித்து திருப்பூா் சிவா நிகேதன் பள்ளி, செயின்ட் ஜோசப் கல்லூரியில் விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
பெருவங்கி தின நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடன் முனைப்பு இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இதில், ஏற்றுமதியாளா்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கிளஸ்டா் திட்டத்தின்கீழ் ரூ.30.25 கோடியும், தனிநபா்களுக்கு ரூ.5.03 கோடியும் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் வைப்புத் தொகைக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ், கவா்ச்சிகரமான வட்டி வீதத்தில் சில்லறை வாடிக்கையாளா்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, வணிகா்கள், விவசாயிகள் மற்றும் தனிநபா்களுக்கு தாரளமாக கடன் வழங்கி வருகிறது என்றனா்.