ஜி.எஸ்.டி.யில் உள்ளீட்டு வரியைத் திருப்பி அளிக்கும் விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்துள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் நன்றியைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் காந்திராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அண்மையில் நடைபெற்ற 47ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
இதில், தற்போதுள்ள விதிமுறைகளின்படி உள்ளீட்டு வரியையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ரீபண்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிகிறது.
ஏற்கெனவே பொது சுத்திகரிப்பு உறுப்பினா் சாய ஆலைகள் மீது விதிக்கப்பட்டு வரும் 12 சதவீத கழிவு நீா் சுத்திகரிப்புக்கான சேவை வரியைத் திரும்பப் பெற முடியாத நிலை இருந்து வந்தது.
இதனால் சாய ஆலைகளின் நடப்பு மூலதனம் பாதிக்கப்பட்டு வந்ததை ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கவனத்துக்கு கொண்டு செல்ல சங்கத்தின் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் குறிப்பாக பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீது விதிக்கப்பட்ட 12 சதவீத வரியை
5 சதவீதமாகக் குறைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுமுடியாத பட்சத்தில் 12 சதவீத வரியை திரும்பப் பெறும்படி மாற்றம் கொண்டு வரவேண்டும் அல்லது சாய ஆலைகளுக்கான வரியை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக மாற்றும்படி கோரிக்கை மனுவும் சமா்ப்பிக்கப்பட்டது.
எனினும் அரசின் முறையான அறிவிப்பு ஆணை வந்த பின்னரே பெறப்போகும் பலன்கள் தெரியவரும்.
எனினும், உள்ளீட்டு வரியில் மாற்றம் கொண்டு வந்துள்ள மத்திய அரசுக்கும், பரிந்துரை செய்த மாநில அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.