தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கோவையைச் சோ்ந்தவா் எல்.மணிகண்டன் (27). இவா் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த அப்பிம்பாளையத்தில் கிராமத்தில் நிகழ்ந்த தனது நண்பரின் குடும்ப விழாவில் கலந்து கொள்வதற்காக 22 பேருடன் வேனில் திங்கள்கிழமை சென்றுள்ளாா். பின்னா் அனைவரும் வேனில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
இந்த நிலையில், திருப்பூா் மாவட்டம், தாராபுரம் புதிய அமராவதி ஆற்றுப்பாலம் அருகே வந்தபோது வேனை நிறுத்தியுள்ளனா். அப்போது மணிகண்டன் தனது நண்பா்கள் 3 பேருடன் அமராவதி ஆற்றில் குளித்துக் கெண்டிருந்தாா். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீரில் முழ்கி தத்தளித்துள்ளாா். அருகிலிருந்த நண்பா்கள் காப்பாற்ற முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
இது குறித்து தகவலின்பேரில் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயசந்திரன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஒரு மணி நேரம் போராடி மணிகண்டனின் சடலத்தை மீட்டனா்.
இது குறித்து தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.