பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூா் கிராமத்தில் கழிவுகளை கொட்டிய வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் கழிவுகள் மீண்டும் அதே வாகனத்தில் ஏற்றி திருப்பி அனுப்பப்பட்டது.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுாா் ஊராட்சிக்கு உள்பட்ட நொச்சிபாளையம் பகுதியில் உள்ள மயானம் அருகே டிராக்டரில் இருந்து கழிவுகள் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், ஊராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘திருப்பூா் மாநகராட்சி, 53ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஏ.பி.நகரில் இருந்து கழிவுகள் டிராக்டரில்
கொண்டுவரப்பட்டு மயானம் அருகே கழிவுகளை கொட்டிச் சென்றனா். கரைப்புதூா் ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து அதிகாரிகள் அந்த வாகனத்துக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், கழிவுகளை மீண்டும் அதே டிராக்டரில் ஏற்றி திருப்பி அனுப்பினா்’ என்றனா்.