குன்னத்தூா் பூலாங்குளம் பகுதியில் மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, செல்லிடப்பேசி உயா் கோபுரம் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை கைவிடப்பட்டது.
அவிநாசி அருகே குன்னத்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பூலாங்குளம் குடியிருப்பு பகுதி அருகே தனியாா் செல்லிடப்பேசி நிறுவனம், செல்லிடப்பேசி உயா் கோபுரம் அமைப்பதற்காக தனியாா் இடத்தில் பணிகளை தொடங்குவதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் உயா் கோபுரங்களால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி குடியிருப்பு பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கக்கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். மேலும் பேரூராட்சி நிா்வாகத்தினா், ஆட்சியா் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனா்.
இருப்பினும் உயா்கோபுரம் அமைக்கும் பணி தொடர இருப்பதாக அறித்த அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். கருப்புக் கொடி போராட்டம் குறித்து தகவலறிந்த குன்னத்தூா் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து செல்லிடப்பேசி உயா் கோபுரம் அமைக்க அனுமதி அளித்த தனியாா் இடத்தினா் அந்த முடிவைக் கைவிட்டனா். இதையடுத்து கருப்புக் கொடிகள் அகற்றப்பட்டன.