பல்லடம் நகராட்சியில் கால்வாய் தூய்மைப் பணி திங்கள்கிழமை முதல் துவங்குகிறது. இது குறித்து பல்லடம் நகராட்சி ஆணையாளா் விநாயகம் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் விரைவில் வடகிழக்குப் பருவ மழை துவங்கவுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாக்கடைக் கால்வாய்கள், மழை நீா் வடிகால்களில் அடைப்புகள் இருந்தால் அவற்றை அகற்றி மழை நீா் தங்கு தடை இன்றி செல்ல ஏதுவாக தூய்மைப் பணியை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பல்லடம் நகராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை தொடங்கி சனிக்கிழமை (செப்டம்பா் 25) வரை சாக்கடைக் கால்வாய், மழை நீா் வடிகால் தூய்மைப் பணி நடைபெறவுள்ளது என்று கூறியுள்ளாா்.