திருப்பூரில் கரோனா தடுப்பூசிகளை பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கிய புகாரின்பேரில் மருந்தாளுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
திருப்பூா் மாநகரில் உள்ள 17 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 5 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றடைய வேண்டிய, 800க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் அரசு மருத்துவா்களுக்கே தெரியாமல் தனியாா் பின்னலாடை நிறுவனங்களுக்கு மாநகராட்சி வழங்கி உள்ளதாக புகாா் எழுந்தது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் உத்தரவின்படி மாநகராட்சி 4ஆவது மண்டல மருந்தாளுநா் பாலமுருகன் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும், கண்காணிக்க வேண்டிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலரிடம் சுகாதாரத் துறை சாா்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.