காங்கயம்: விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி, காங்கயம் அருகே படியூரில் புதன்கிழமை தென்னை மரக் கன்றுக்கு பூஜை செய்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய விளை நிலங்களில், விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் திட்டம் மூலம் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும், இந்த மின் திட்டங்களில் சாலையோரமாக கேபிள் மூலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்கயம் அருகே படியூரில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் 200 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம், நிலத்தின் பட்டா நகல் எரித்து எதிர்ப்பு, ரத்தத்தில் எழுதி எதிர்ப்பு தெரிவித்து வருவது என நூதனமான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தப் போராட்டத்தின் 8 ஆம் நாளான புதன்கிழமை உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தென்னை மரக் கன்றுக்கு பூஜை செய்து, கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.