திருப்பூரில் குடும்பத் தகராறு காரணமாக வாட்ஸ்ஆப்பில் தூக்கிடுவதை ஸ்டேட்டஸாக வைத்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர், சாமுண்டிபுரத்தில் உள்ள நாகாத்தம்மன் கோயில் அருகே வசித்து வருபவர் பாண்டியராஜன் (27), இவரது மனைவி சித்ரா (21). இந்தத் தம்பதிக்கு 5 வயதில் குழந்தை உள்ளது.
பாண்டியராஜன் புஷ்பா ரவுண்டான பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பாண்டியராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. மேலும் சரிவர வேலைக்குச் செல்லாததாலும் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த பாண்டியராஜன் வாட்ஸ்ஆப்பில் தூக்கிடுவதை ஸ்டேட்டஸாக வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த 15.வேலம்பாளையம் காவல் துறையினர் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
திருப்பூரில் தொழிலாளி ஒருவர் ஸ்டேட்டஸ் பதிவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.