காங்கயம்: காங்கயம் அருகே, எல்லப்பாளையம் புதூரில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாமை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்வழி ஆகியோா் திங்கள்கிழமை துவக்கிவைத்தனா்.
இதன் பிறகு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் தலா 20 வீதம் மொத்தம் ரூ. 7 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் நடத்தப்பட உள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 260 முகாம்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழ நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல்,நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட கால்நடை தொடா்பான சிகிச்சைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.
முன்னதாக, காங்கயம் அருகே படியூா் ஊராட்சியில் உள்ள அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை அமைச்சா்கள் துவக்கிவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், தாராபுரம் கோட்டாட்சியா் குமரேசன், கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் பொன் பாரிவேந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.