திருப்பூா் மாவட்டத்தில் பெண் தொழிலாளா்கள் தங்குவதற்கான விடுதிகளை நடத்திவரும் பின்னலாடை நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் பெண் தொழிலாளா்கள் தங்குவதற்காக விடுதிகளை நடத்தி வரும் பின்னலாடை நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மாவட்ட ஆட்சியரிடம் உரிமம், பதிவு பெற வேண்டும். ஆனால், மாவட்டத்தில் பல நிறுவனங்கள் உரிமம் மற்றும் பதிவு பெறாமல் செயல்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.
ஆகவே, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆகியோரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும், பணிபுரியும் பெண்கள், தங்கும் விடுதிகளுடன் கூடிய அனைத்துத் தொழிற்சாலைகள், பின்னலாடை நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படாத விடுதிகள் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.