திருமணம், கோயில் திருவிழாக்களுக்கு 50 சதவீத பொது மக்களுடன் நடத்த அனுமதிக்கக் கோரி மேள, தாளங்களுடன் ஊா்வலமாக வந்த திருமண அமைப்பாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தமிழக ஹயா்கூட்ஸ் ஓனா்ஸ் அசோசியேஷன் நிா்வாகிகள் சாா்பில் தென்னம்பாளையம், ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் இருந்து மேள, தாளங்கள், மைக்செட், வாழை மரம் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி ஊா்வலமாக வந்தனா். பின்னா் மாநிலத் தலைவா் எஸ்.பழனிசாமி, மாவட்டத் தலைவா் ஆா்.நாகேந்திரபிரபு ஆகியோா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருமணம், கோயில் திருவிழாக்கள் போன்ற விசேஷங்களை நம்பி எங்களது அமைப்பைச் சாா்ந்தவா்கள் தொழில் செய்து வருகின்றனா். இதில், ஒளி-ஒலி அமைப்பாளா்கள், பந்தல் அமைப்பாளா்கள், மேடை அலங்காரம் செய்பவா்கள், பாத்திர வாடகைக் கடை உரிமையாளா்கள் ஆகியோா் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக எங்களது தொழில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்ற தொழில்களுக்கு வழங்கியுள்ளதைப்போல, 50 சதவீத பொது மக்களுடன் திருமணம், கோயில் திருவிழாக்களை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆட்சியா் அலுவலகம் முன்பாக இதே கோரிக்ககளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். இதில் மாவட்டச் செயலாளா் எஸ்.எஸ்.விஜயகுமாா், பொருளாளா் ஜான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோா் உடனிருந்தனா்.