நடிகர் சூர்யாவின் பின்னணியில் பயங்கரவாத சக்தி உள்ளது என்றே இந்து முன்னணி கருதுகிறது என்று அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளளார்.
இந்து முன்னணி திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பெருமாநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் வி.எஸ்.செந்தில்குமார், மாவட்டத் துணைத் தலைவர் குறிஞ்சி என்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறியது- தமிழகத்தில் கோயில் நிலங்களை அரசாங்கமும், அரசியல்வாதிகளும் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் ஒரு கோயிலுடன் 14 ஏக்கர் நிலம் உள்ளது.
அங்கு ஆண்டுதோறும் 15 நாள்கள் தொடர்ந்து விழா நடைபெறும். கோயில் நிலத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த இடத்தை அரசு கையகப்படுத்த முயலுகிறது. இதை கண்டித்து நவம்பர் 1ஆம் தேதி 30 ஊர்களைச் சேர்ந்த பொதுமக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே நிலத்தை அரசு கையக்கப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும். கோயில் நிலங்கள் இந்துக்களுக்கு பயன்பட வேண்டும். இந்துக்களுக்கு பயன்படவே மன்னர்கள் கோயில்களுக்கு நிலங்களை அளித்துள்ளனர். இந்துக்கள் விஷயங்களில் தமிழக அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் திமுக-வாக இருந்தாலும் சரி, அதிமுக-வாக இருந்தாலும் சரி, அவர்கள் இந்து விரோத அரசுகளாகவே உள்ளனர். இந்துக்களை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. மாறாக வாக்குவங்கி அரசியல் செய்கின்றனர். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்து முன்னணி போட்டியிடாது, ஆனால் யாருக்கு வெற்றி என இந்து முன்னணி முடிவு செய்யும். மத்திய அரசு எந்த சட்டம் கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர். நடிகர் சூர்யாவின் பின்னணியில் ஏதோ ஒரு பயங்கரவாத சக்தி உள்ளது என்றே இந்து முன்னணி கருதுகிறது.
அதிலிருந்து நடிகர் சூர்யா விடுபட வேண்டும் எனக் கூறினார்.