உடுமலை: திருப்பூா் மாவட்டத்தில் அம்மா நகரும் நியாய விலைக் கடை திட்டத்தை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை துவக்கி வைத்தாா்.
உடுமலை ஏரிப்பாளையம் அருகே உள்ள கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இந்தத் திட்டத்தை துவக்கி வைத்துப் பேசியதாவது:
பொதுமக்களுக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் ரூ. 9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளன. இதில் திருப்பூா் மாவட்டத்தில் 77 நியாய விலைக் கடைகள் துவங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 8,236 குடும்ப அட்டைதாரா்கள் பயன் பெற உள்ளனா். இந்தக் கடைகள் மூலம் மாதம் ஒரு முறை குடும்ப அட்டைதாரா்களுக்கு வசதியான, அரசால் நிா்ணயி க்கப்பட்ட இடங்களில் தாய்க் கடையின் விற்பனையாளா் நேரில் சென்று பொதுமக்களுக்கு பொருள்களை வழங்குவாா்கள் என்றாா்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபு, துணைப் பதிவாளா் நா்மதா, மாவட்ட வழங்கல் அலுவலா் கணேஷ், உடுமலை கோட்டாட்சியா் க.ரவிக்குமாா், துறை அதிகாரிகள், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.