திருப்பூா் அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக மேலும் ஒரு பெண் மூச்சுத் திணறலால் உயிரிழந்தாக அவரது உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து திருப்பூா், மும்மூா்த்தி நகரைச் சோ்ந்த எஸ்.மீனாட்சி என்பவா் உறவினா்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
எனது தாய் அனுராதா (45) திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். மூச்சுத்திணறல் காரணமாக அவா் திருப்பூா் அரசு மருத்துவமனையில் செப்டம்பா் 16 ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தாா். அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடா்ந்து செப்டம்பா் 21 ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்தது.
இதனிடையே, மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்பட்டதால் எனது தாய்க்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்படாததால் மூச்சுத்திணறி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா். ஆகவே, எனது தாயின் உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.