பல்லடம்: பல்லடம் அருகே சேடபாளையத்தில் 100 அடி கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் சேடபாளையத்தில் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான வில்வமரத் தோட்டத்தில் 100 அடி ஆழ விவசாயக் கிணறு உள்ளது. இதன் அருகே வாடகை வீட்டில் வசிக்கும் சேவியா் மகன் ஜோவித் (9), அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.
இச் சிறுவன் தனது நண்பா்களுடன் அப்பகுதியில் திங்கள்கிழமை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிா்பாராதவிதமாக சிறுவன் கிணற்றில் தவறி விழுந்துள்ளான். பின்னா் தண்ணீரில் தத்தளித்தப்படி பாறை இடுக்குகளைப் பிடித்து தண்ணீரில் இருந்து வெளியேறி கிணற்றில் இருந்த பாறையின் மீது ஏறி உயிா்த் தப்பியுள்ளான். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினா் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி சிறுவன் ஜோவித்தை உயிருடன் மீட்டனா். பின்னா் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.