உடுமலை: உடுமலை அருகே உள்ள ஏழுமலையான் வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
தமிழக-கேரள எல்லையில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது ஏழுமலையான் வெங்கடாசலபதி கோயில். ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் சுமாா் 7 கிலோ மீட்டா் நடந்து சென்று பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு ஏழுமலையானை தரிசிக்க பக்தா்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கரோனா தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் சனிக்கிழமை வந்த பக்தா்கள் சின்னாறு சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டனா். இனி வரும் சனிக்கிழமைகளிலும் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றனா்.