காங்கயம்: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கயத்தில் புதன்கிழமை ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது.
காங்கயம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப.கோபி தலைமை வகித்தார். இதில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் விவசாயிகள் மீது மோடி அரசு தடியடி நடத்துவதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறையின் மாநில துணைத் தலைவர் டி.டி.கே.சித்திக், திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பண்டுபாய், காங்கயம் நகரத் தலைவர் சிபக்கத்துல்லா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரவணன் உள்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், விவசாயிகள் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.