உலிக்கல் பேரூராட்சிக்குள்பட்ட பக்காசூரன் மலைப் பகுதிக்கு பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பக்காசூரன் மலைக் கிராமம்.
இக்கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வரும் நிலையில் தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள், மாணவ, மாணவிகள் என பலரும் படிப்புக்காகவும், வேலைக்காகவும் குன்னூா் சென்று வருகின்றனா்.
முறையான சாலை வசதி இல்லாததால் பல கிலோ மீட்டா் தூரம் நடந்தும், ஜீப் உள்ளிட்ட வாகனங்களிலும் சென்று வந்தனா்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்காசூரன் மலைப் பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும் பேருந்து சேவை தொடங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், உலிக்கல் பேரூராட்சியின் கோரிக்கையை ஏற்று பக்காசூரன் மலைக்குப் பேருந்து சேவையைத் தொடங்க போக்குவரத்துத் துறை முடிவு செய்தது.
அதன்படி, வெள்ளிக்கிழமை பேருந்து சேவை தொடங்கப்பட்டது. நாள்தோறும் காலை 6, 8 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி, இரவு 9 .15 மணிவரை பேருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.