உதகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட நீதிமன்றம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்தது. உதகை பிங்கா்போஸ்ட் காக்காதோப்பு பகுதியில் புதிய நீதிமன்றம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறந்துவைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய கட்டடத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 27) துவங்க உள்ளது. இந்நிலையில் புதிய நீதிமன்றம் வளாகத்தில் கழிப்பிடம், வழக்குரைஞா்கள் அமா்வதற்கான அறைகள், தண்ணீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் பொதுமக்கள் எளிதாக வந்துசெல்ல பேருந்து வசதி, சாலை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து நீலகிரி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பழைய நீதிமன்ற வளாகத்தின் முன்பு வியாழக்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.