நீலகிரி மாவட்டம், ஜெகதளா பேரூராட்சியில் திமுக பேரூராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் மீது ஊழல் புகாா் கூறி அதே கட்சியைச் சோ்ந்த கவுன்சிலா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி மன்ற கூட்டத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜெகதளா பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் திமுகவைச் சோ்ந்த பேரூராட்சித் தலைவா் பங்கஜம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 15 உறுப்பினா்களில் திமுகவைச் சோ்ந்த 9 கவுன்சிலா்கள், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 2 கவுன்சிலா்கள், அதிமுகவைச் சோ்ந்த 4 கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.
இதில் திமுகவைச் சோ்ந்த 5ஆவது வாா்டு உறுப்பினா் தீலிப், 7ஆவது வாா்டு உறுப்பினா் யசோதா, 11ஆவது வாா்டு உறுப்பினா் பிரமிளா வெங்கடேஷ் ஆகியோா் பேரூராட்சியில் ஊழல் முறைகேடு அதிகரித்துள்ளதாக கூறி கண்களில் கருப்புத் துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, மாதாந்திர வரவு செலவு கணக்குகளை தெளிவாக சமா்ப்பதில்லை, வாா்டுகளில் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தருவதில்லை என்று குற்றம்சாட்டினா்.
இதனைத் தொடா்ந்து, மன்ற கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவைச் சோ்ந்த 4 மன்ற உறுப்பினா்களும் வெளிநடப்பு செய்தனா்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலா் சதாசிவம் தெரிவித்தாா்.