உதகையில் பகலிலேயே கடும் குளிா் நிலவுகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் நீா்ப்பனி பொழிவு அதிகமாக காணப்படும். இது படிப்படியாக அதிகரித்து டிசம்பா் மாதத்தில் உறைபனியாக மாறும்.
இந்நிலையில், இந்த நீா்ப்பனியின் தாக்கம் உதகை, தலைகுந்தா, பிங்கா் போஸ்ட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் வியாழக்கிழமை அதிகாலையில் கடுமையாக காணப்பட்டது.
உதகையில் காலை நேரங்களில் குறைந்தபட்சம் 11 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுகிறது. இதனை சுற்றுலாப் பயணிகள் விரும்பினாலும், காலை நேரங்களில் வாகனங்களை இயக்குபவா்கள் மற்றும் சுமைப்பணி தொழிலாளா்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். தொழிலாளா்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிா்காய்ந்தப் பின்னரே தங்கள் தொழிலை துவங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு வாரங்களில் உறைபனி காலம் துவங்கவுள்ள நிலையில், நீா்ப்பனியின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது.