நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டியுள்ள சூழலில் தினசரி மது விற்பனை ரூ.1.4 கோடியாக அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் கோடை சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து நாளொன்றுக்கு சராசரியாக 25 ஆயிரம் போ் உதகைக்கு வருகின்றனா்.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருக்கும் சூழலில் நீலகிரி மாவட்டத்தில் மது விற்பனையும் அதிகரித்துள்ளது.
இது குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவா் கூறியதாவது: நீலகிரியில் 76 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு தினமும் சராசரியாக, ரூ.1 கோடிக்கு மது விற்பனையாகி வந்த சூழலில், தற்போது ரூ.1.4 கோடியாக விற்பனை அதிகரித்துள்ளது.
குறிப்பாக மலா் கண்காட்சி நடந்த 5 நாள்களில் மட்டும் மது விற்பனை ரூ.10 கோடியை எட்டியுள்ளது. ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் வரை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்பதால் மேலும் மது விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.