பசுந்தேயிலைக்கு கிலோவுக்கு ரூ. 30 வழங்கக் கோரி சிறு, குறு தேயிலை விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி வரும் ஜூன் 27 ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.
இது குறித்து சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்கத் தலைவா் தும்பூா் ஐ. போஜன் மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. பெரும் தேயிலைத் தோட்டங்களுடன் 60 ஆயிரம் ஏக்கரில் சிறு, குறு தேயிலை தோட்டங்களும் உள்ளன. இந்தத் தொழிலை நம்பி ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோா் உள்ள நிலையில் தற்போது ஒரு கிலோ பசுந்தேயிலைக்கான விலை ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே கிடைக்கிறது. ஆனால் உரம், ஏற்றுக் கூலி, இறக்கு கூலி செலவே ஒரு கிலோவுக்கு ரூ.13 வரை செலவாகிறது.
இதனால் சிறு, குறு தேயிலை விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா்.எனவே, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.30 நிா்ணயம் செய்ய தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தேயிலைத் தோட்டங்களில் வரும் ஜூன் 27 ஆம் தேதி பசுந்தேயிலையைப் பறிக்காமல் வேலை நிறுத்தம் செய்ய சிறு, குறு தேயிலை சங்கங்கள் முடிவு செய்துள்ளன. மேலும் அன்றைய தினம் தேயிலை விவசாயிகளின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கருப்புக் கொடி ஏற்றப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.