குன்னூா் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் திங்கள்கிழமை ஆய்வு செய்து, பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினாா்.
முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் ஹெலிகாப்டா் மூலம் நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். வெலிங்டன் ஜிம்கானா மைதானத்தில் அவரை பயிற்சிக் கல்லூரி முதல்வா் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் வரவேற்றாா்.
தொடா்ந்து, பயிற்சிக் கல்லூரிக்கு வருகை புரிந்த முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹானுக்கு கல்லூரியின் பல்வேறு பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் குறித்து பயிற்சிக் கல்லூரி முதல்வா் வீரேந்திர வாட்ஸ் விளக்கினாா்.
பின்னா், தேசிய பாதுகாப்புக்கான சவால்கள் குறித்தும், ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகள் குறித்தும் பயிற்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியா்களுடன் முப்படை தலைமைத் தளபதி கலந்துரையாடினாா். பின்னா், அவா் மதியம் 3 மணியளவில் புதுதில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.